கோலாலம்பூர், ஏப்ரல் 22-
13 வயதுக்கும் குறைவான பிள்ளைகள், எந்தவொரு சமூக ஊடகங்களையும் பயன்படுத்தாமல் இருப்பதை பெற்றோர்கள் உறுதிபடுத்த வேண்டுமென தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சில் வலியுறுத்தினார்.
தொடர்பு பல்லூடக ஆணையம் – SKMM மேற்கொண்ட ஆய்வில், அனைத்து சமூக ஊடகங்களும் 13 வயதுக்கு குறைவான சிறார்கள் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லாதது கண்டறியப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அவர் அக்கூற்றை முன்வைத்துள்ளார்.
நடப்பில், முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப், டெலெக்ராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், கணக்கை திறக்கின்ற தனிநபர்கள் உண்மையிலேயே அந்த வயது வரம்புக்கு உட்பட்டவர்களா என்பதை உறுதி செய்வதற்கென அணுகுமுறை ஏதும் இல்லாமல் உள்ளது.
சம்பந்தப்பட்ட சமூக ஊடக நடுத்துநர்களிடம் அது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ள வேளை, மே மாத தொடக்கத்தில் வயது வரம்பை உறுதிபடுத்தும் அணுகுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என பாஹ்மி கூறினார்.