கோலாலம்பூர், மார்ச் 8 –
இஸ்லாத்தின் மேன்மை தற்காக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் ஆட்சியாளர்களை மறைமுகமாக சிறுமைப்படுத்தும் தன்மையிலான அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை மேல் நடவடிக்கைக்காக சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ராசாருடின் ஹூசேன் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி அகப்பக்கம் ஒன்றில் அப்துல் ஹாடி அவாங் பதிவேற்றம் செய்த ஓர் அறிக்கை தொடர்பில் அவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
மாராங் எம்.பி.யான அப்துல் ஹாடி அவாங், 1948 ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டு தகவல், பல்லூடக் சட்டம் ஆகியவற்றின் கீழ் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தான் ஶ்ரீ ராசாருடின் தெரிவித்தார்.