கோத்தா கினாபாலு , பிப்ரவரி 26 –
இவ்வாண்டு ஹரிராயா பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பண்டிகை நாளிலிருந்து முதல் 3 தினங்களுக்கு சபா, சரவாக், லாபுவான் வழித்தடங்களுக்கு ஒரு வழிப்பயணத்திற்கு சிக்கன வகுப்பில், விமான டிக்கெட் கட்டணம் கூடிய பட்சம் 599 வெள்ளி என்று அரசாங்கம் நியமித்திருப்பது இரண்டு வாரங்களாக நீடிக்க வேண்டும் என்று சபா பயனர்கள் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
குறிப்பிடப்பட்ட மூன்று வழித்தடங்களில் இருக்கும் பயனர்கள் ஹரிராயா பெருநாளை கொண்டாடுவதற்கு தங்களின் சொந்த கிராமத்திற்கு திரும்புவதற்கும் பண்டிகைக்கு அப்பால் விடுமுறைய கழிப்பதற்கும் சீரான விமானக்கட்டணத்தை உறுதி செய்யும் பொருட்டு மேற்கண்ட கட்டணத் தொகையின் கால அவகாசம் நீடிக்க வலியுறுத்துவதாக சபா பயனர்கள் முன்னணியின் தலைவர் னோர்டின் தானி தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட மூன்று நாள் கால அவகாசம் போதுமானது இல்லை என்றும் அனைவருக்கும் முன்கூட்டியே விடுமுறை கிடைக்காது மற்றும் சிலர் பண்டிகையின் போது வேலை செய்ய வேண்டியதாக இருக்கும் என்று னோர்டின் தானி குறிப்பிட்டார்.
பெருநாளின் ஒரு வாரத்திற்கு முன்பும், பெருநாளின் ஒரு வாரத்திற்கு பிறகும் பயனர்கள் விடுமுறை எடுத்து செல்லவிரும்பினால் இவை பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.