வெண்டிலேட்டர் இயந்திரம் மூலம் நோயாளிக்கு சுவாச உதவி பெறுவது தொடர்பான சிகிச்சை குறித்து கோலாலம்பூர் பொது மருத்துவமனை விசாரணை நடத்தி வருகிறது என அதன் இயக்குநர் Dr Rohana Johan தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நோயாளியின் பாதுகாப்பைப் பாதிக்கும் எந்தவொரு சிகிச்சை சிக்கல்களும் விசாரிக்கப்பட்டு, முறையாக ஆராயப்படும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் இருக்கும் மருத்துவமனையில், ஒரே வாரத்தில் இரு வேறு வார்டுகளில் ஒரு நோயாளி மரணித்தது குறித்தும், மற்றொரு நோயாளிக்கு மூளைச் சாவு ஏற்பட்டது குறித்தும் FMT செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.
அவ்விரு சம்பவங்களுக்கும் பயன்படுத்தப்பட்ட வெண்டிலேட்டர் சரியாக செயல்படாதது காரணம் எனக் கூறப்பட்டு வருகிறது.
வெண்டிலேட்டர் சரியாகச் செயல்படாததால் ஒரு நோயாளி மரணித்து விட்டார் எனௌம் அவரை மீண்டும் சுய நினைவுக்குக் கொண்டு வர மருத்துவ அதிகாரிகள் முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு நிலவரத்தில், நோயாளி ஒருவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டு விட்டது என அறிவிக்கப்பட்டிருந்தது. 15 நிமிடங்களாக அவர் சுய நினைவுக்கு வராததால் அவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்தில் வெண்டிலேட்டர் செயல்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
சாப்பிடும்போது மீன் முள் தொண்டையில் சிக்கியதால், அந்த நோயாளி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். பரிசோதனைக்காக வழக்கமான anestesia அவருக்குக் கொடுக்கப்பட்டது. இருப்பினும், அந்த மீன் முள்ளை மருத்துவர் கண்டுபிடிக்க முடியாத நிலையில், நோயாளியை 48 மணி நேரம் அமைதிப்படுத்த மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாகத் தகவல் கசிந்தது.
நோயாளி சுய நினைவுக்கு வரவில்லை எனவும், வெண்டிலேட்டர் செயல்படாதது பின்னர் தெரிய வந்தது எனசும் சில நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தெரிய வந்தது.
நோயாளியை மீண்டும் எழுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டு விட்டது என அறிவிக்கப்பட்டது.
இதே போல் இன்னும் இரு வேறு சம்பவங்கள் இருப்பதாகவும் தகவல் அறிந்த இன்னொரு நபர் குறிப்பிட்டார்.