24 மணிநேரத்திற்குள் திருட்டு புரிந்த நபர் கைது

கோலா சிலாங்கூர், ஏப்ரல் 16-

கோலா சிலாங்கூர், பாசிர் பெனாம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலின் பார்க்கிங் பகுதியில் கார் கண்ணாடியை உடைத்து மடிக்கணினியை திருடியதாக இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணியளவில் சந்தேகிக்கும் 20 வயதுடைய இளைஞன் கம்போங் பெர்மாத்தாங் தெங்கா அருகேயுள்ள ஓர் இடத்தில் கைது செய்யப்பட்டதாக கோலா சிலாங்கூர் மாவட்ட துணை போலீஸ் அதிகாரி துணை கண்காணிப்பாளர் முகமட் அம்பியா நோர்டின் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் அந்த இளைஞரும் அவரின் நண்பர்களும் பாதிக்கப்பட்ட நபரின் கார் கண்ணாடியை உடைத்து பையில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினியை திருடி சென்றதாக முகமட் அம்பியா கூறினார்.

சந்தேகிக்கும் இளைஞன் 24 மணி நேரத்திற்குள் போலீசாரால் கைது செய்யப்பட்ட வேளையில் அவருடன் கூட்டாக திருட்டு புரிந்த நண்பர்கள் மேலும் தேடப்பட்டு வருவதாக முகமட் அம்பியா விவரித்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 379 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்