மாரான், ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் 92 ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, பத்து மலை முருகன் திருத்தலத்திலிருந்து மாரானை நோக்கி பாதயாத்திரை பயணம் இன்று அதிகாலையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
கோலாலம்பூர், மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் பாதயாத்திரை கழகமான Maran Marathon Club ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில மூடா கட்சியின் ஒத்துழைப்புடன் தொடங்கிய இந்தப் பாதயாத்திரை பயணத்தில் 150க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பங்குக்கொண்டுள்ளனர்.
ஆறு நாட்களை உள்ளடக்கிய கோலாலம்பூரிலிருந்து மாரான் வரை 204 கிலோமிட்டர் தூரத்தைக் கொண்ட இந்தப் பாதயாத்திரை பயணத்தின் தொடக்க விழா, நேற்று இரவு பத்து மலை, திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பாதயாத்திரை ஏற்பாட்டு குழுத் தலைவரும் மாரான் மரதோன் கிளப்பின் தலைவருமான விஜயராஜ் ராஜமாணிக்கம் மற்றும் சிலாங்கூர் மாநில மூடா கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.சிவபிரகாஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாதயாத்திரை பங்கேற்பாளர்கள், ஏற்பாட்டு குழுவினர், மருத்துவ, பாதுகாப்பு, போக்குவரத்து, தங்கும் வசதி ஆகியவற்றுக்கான பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
16 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய சிலாங்கூர் மாநில மூடா கட்சியின் துணைத் தலைவர் ஆர்.சிவபிரகாஷ், இந்தப் புனிதப் பயணம், கிழக்கை நோக்கி ஓர் ஆன்மீக நடைப் பயணமாக இருந்தாலும், மனவளம், உடல் பலம் ஆகியவற்றைத் திடகாத்திரமாக வைத்துக்கொள்வதற்குப் பயிற்சி ரீதியாக வழங்கப்படும் ஒரு பெரு நடையாகும்.
ஆன்மீக சிந்தனையுடன் மன வலிமையை உறுதிப்படுத்தக்கூடிய இந்தப் பயணத்தில், பங்கேற்பாளர்கள் தங்களின் பாதுகாப்பிற்கு அதீத முன்னுரிமை வழங்க வேண்டுமென்று ஆர்.சிவபிரகாஷ் கேட்டுக்கொண்டார். மத்து மலையிலிருந்து தொடங்கிய பாதயாத்திரை, இன்று மதியம் 12 மணியளவில் காராகில், சிறிது நேர ஓய்வுக்காக நிறுத்தப்பட்டது
இந்தப் பாதயாத்திரை வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்து, ஆதரவு அளித்த பிரமுகர்கள் கெளரவிக்கப்பட்டு, தொடங்கப்பட்டுள்ள இந்தப் பயணத்தின் முதல் நாளான இன்று, பங்கேற்பாளர்கள், காராக், டேவான் சுங்கை டிங்கின் மண்டபத்தில் தங்குவதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.