அனைத்து மருத்துவமனைகளும் பாதிக்கப்படவில்லை

இன்று திங்கட்கிழமை ஒப்பந்த மருத்துவர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அச்சுறுத்தல் இருந்த போதிலும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை மற்றும் செர்டாங் மருத்துவமனை ஆகியவற்றின் செயலாக்கங்கள் வழக்கம் போலவே இருந்தன.

இவ்விரு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதைப் போல தெரியவில்லை என்று செய்தி நிறுவனங்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை வழக்கம் போலவே பரபரப்பாகவே காணப்பட்டது. அதன் செயல்பாடுகளில் தடை ஏற்பட்டுள்ளன என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

ஒரு சில ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையை ஆதரிக்கும் வகையில் பணிக்கு மட்டம் போட்ட போதிலும் அதன் தாக்கம் பெரியதாக இல்லை என்று கோலாலம்பூர் மருத்துமனையின் முதிர்நிலை பணியாளர் ஒருவர் கூறுகிறார்.

இதேபோன்று செர்டாங் மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவர்கள் அவசர விடுப்பு எடுத்துள்ளதாக தெரியவில்லை. அதன் செயல்பாடுகள் வழக்கம் போலவே இருந்தன.

சபா, கோத்தா கினபாலு, குவீன் எலிசபத் மருத்துவமனையில் வேலை நிறுத்தத்திற்கானஅறிகுறிகள் தென்பட்டன. கருப்புத்தினம் என்ற கருப்பொருளுடன் இந்த வேலை நிறுத்தத்தில் ஒரு சில ஒப்பந்த மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜோகூர்பாரு, சுல்தானா அமினா மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும் யாரும் வேலை நிறுத்தத்தில் ஈடுவில்லை. அவசரப்பிரிவு உட்பட அனைத்து பிரிவுகளின் செயல்பாடுகளும் சுமூகமாக இருந்தன. இதேபோன்று பினாங்கு மற்றும் ஈப்போ பெரிய மருத்துவமனைகளின் செயல்பாடுகளிலும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS