குற்றவாளிகளுக்குக் கட்டாய மரணத் தண்டனை விதிப்பதை ரத்து செய்யும் சட்டத்திருத்த மசோதா இன்று மக்களவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மரணத் தண்டனைக்குப் பதிலாக கூடிய பட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுவதற்கு, நீதிபதிகளுக்கு இந்தச் சட்டத்திருத்த மசோதா விருப்புரிமையை வழங்குகிறது.
இந்தப் புதிய சட்டத்தின் வழி, தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்காக காத்திருக்கும் 1,318 கைதிகள் மரணத் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, இச்சட்டத்திருத்த மசோதா குறித்து மக்களவையில் பேசிய, சட்டத்துறைத் துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங், கடுங்குற்றங்களைப் புரியும் குற்றவாளிகளுக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பது என்பது இனி, நீதிபதிகளின் விவேகத்திற்கு உட்பட்டு முடிவுச் செய்யப்படும் என்றார்.
அதே வேளையில், குற்றவாளிகளுக்குக் கூடிய பட்சம் 40 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிப்பதற்கு இச்சட்டத்திருத்தம், நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்குவதாக ராம் கர்ப்பால் விளக்கினார்.