முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதத் தொகையையும் விதித்த நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி, நீதித்துறை நன்னெறிக் கோட்பாட்டை மீறியுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தனது விசாரணை முடிவில் தெரிவித்துள்ள ஒரு விஷயத்தை நஜீப்பின் வழக்கறிஞருக்கு கடிதம் வாயிலாக சட்டத்துறை அமைச்சர் அஸாலினா உறுதிபடுத்தியிருப்பது மூலம் இவ்விகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு உள்ளதா? என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நஜீப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவின் சட்டத் தொழில் நிறுவனமான ஷஃபீ அண்ட் Co நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் அஸாலினா மிகத் துல்லியமாக பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் அஸாலினாவிற்கு நஜீப்பின் வழக்கறிஞர் அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார். நஜீப் வழக்கை விசாரணை செய்த நீதிபதி நஸ்லான், நீதித்துறை நன்னெறிக் கோட்பாட்டை மீறியுள்ளாரா? இவ்வழக்கில் நீதிபதி நஸ்லான் நலன் சார்ந்த அம்சங்கள் உள்ளனவா? என்பன உட்பட 3 கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன.
இதற்கு பதில் அறித்துள்ள அமைச்சர் அஸாலினா, ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கையின்படி அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று உறுதிபடுத்தியுள்ளார்.
எனினும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை முடிவுகளின் ஆவணங்கள் ரகசியத்திற்கு உட்பட்டது என்று வகைப்படுத்தப்பட்டுள்ள பட்சத்தில் அந்த ஆவணங்களின் உள்ளடக்கத்தை நஜீப்பின் வழக்கறிஞருக்கு அமைச்சர் அஸாலினா கடித வாயிலாக தெரிவித்து இருப்பது மூலம் இது நீதித்துறையைக் கீழறுப்புச் செய்யும் ஒரு தந்திரமாகும் என்று அம்பிகா குற்றஞ்சாட்டினார்.
அத்துடன் இதில் அரசாங்க நிர்வாகத்தின் தலையீடு இருப்பது தெளிவாக தெரிகிறது என்று அம்பிகா வாதிடுகிறார்.