நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில், நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிறைவு செய்வதற்கு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் சிறப்புத் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹூய் யிங் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பி எனப்படும் கல்விச் சேவை ஆணையத்தின் வாயிலாக, ஆசிரியர் தொழிலுக்கு விண்ணப்பிக்கும் இந்த சிறப்புத் திட்டம் தொடங்கப்படுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய மொழி, ஆங்கிலம், இஸ்லாமிய ஆய்வியல், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 4 துறைகளில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக துணை அமைச்சர் விளக்கினார்.
முழு நேர ஆசிரியர் தொழில் அல்லது தற்காலிக ஆசிரியராக பணியாற்ற விரும்புகின்றவர்கள், கல்விச் சேவைக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் துறையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது கல்வித் துறை அல்லாத இதர துறைகளில் பட்டம் பெற்றவர்கள், கல்வி அமைச்சின் அகப்பக்கத்தின் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களைச் சமர்பிக்கும்படி துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹூய் யிங் கேட்டுக்கொண்டார்.