ஜோகூர், குளுவாங்கில் பஃபர் மீன் எனப்படும் ஊது மீனை உண்ட இரண்டாவது நபரும் உயிரிழந்தார். 84 வயதுடைய அந்த முதியவர் ஊது மீனை உண்ட பின்னர் கடந்த ஒரு வார காலமாக சுயநினைவு இழந்த நிலையில் குளுவாங் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு ப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலையில் சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கொடிய விஷத்தைக் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படும் ஊது மீனை, கடந்த மார்ச் 25 ஆம் தேதி சமைத்து உண்ட மூதாட்டி ஒருவர் உயிரிழந்த வேளையில் அவரின் கணவர் மிக ஆபத்தான நிலையில் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அந்த முதியவரும் இன்று உயிரிழந்துள்ளார். ஆஸ்துமாவை குணப்படுத்த வல்ல ஒரு வகையான திரவம் அந்த ஊதுமீனில் இருப்பதாக நம்பி, அதனை சமூக வலைத்தளங்களில் வாயிலாக முன் உறுதி செய்து, பெற்று அந்த தம்பதியர் சமைத்து உண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.