கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தைத் தளமாக கொண்டு சட்டவிரோத குடியேறிகளுக்குக் குறிப்பாக இந்தியா மற்றும் வங்காளதேசப் பிரஜைகளுக்கு பி.கெ.எல்.எஸ். எனப்படும் போலி தற்காலிக வேலை பெர்மிட்டைத் தயாரித்து கொடுத்து வந்த மிகப்பெரிய கும்பல் ஒன்றை மலேசிய குடிநுழைவுத்துறை முறியடித்துள்ளது.
கடந்த புதன்கிழமை தொடங்கி, இரண்டு தினங்களுக்கு பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போலி தற்காலிக வேலை பெர்மிட்டைத் தயாரித்து கொடுத்து ஆண்டுக்கு 45 லட்சம் வெள்ளி முதல் 50 லட்சம் வெள்ளி வரையில் வருமானமாக ஈட்டி வந்த கும்பல் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லீன் ஜுசோ தெரிவித்தார்.
இந்தச் சட்டவிரோத ஆவண தயாரிப்பு நடவடிக்கைக்கு மூளையாக இருந்த செயல்பட்ட 45 வயதுடைய இந்தியப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ள அதேவேளையில், இந்தக் கும்பலின் வலது கரமாக விளங்கிய 30 வயது மதிக்கத்தக்க வங்காளதேசி ஒருவர் சிரம்பானில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சாலையில் வேலை செய்யும் சட்டவிரோதக்குடியேறிகளுக்கு போலி வேலை பெர்மிட்டை தயாரித்து கொடுப்பதற்கு தலா 6 ஆயிரம் வெள்ளியை சேவைக்கட்டணமாக இந்த கும்பல் பெற்று வந்துள்ளதாக ருஸ்லீன் ஜுசோ விவரித்துள்ளார்.
இந்த சோதனை நடவடிக்கையின் மூலம் 40 இந்திய கடப்பிதழ்கள், 20 வங்காளதேச கடப்பிதழ்கள், இரண்டு பாகிஸ்தான் கடப்பிதழ்கள் ஆகியவை வேலை பெர்மிட்டிற்கான போலி ஸ்திக்கர் ஒட்டப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.