மக்கள் பணத்தைச் சூறையாடுவதற்கு எந்தவொரு அரசியல் தலைவருக்கும், பொதுச் சேவை ஊழியருக்கும் அனுமதியில்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் முற்றிலும் மாறுப்பட்டது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
அரசியல் தலைவரோ பொதுச் சேவை ஊழியரோ மக்கள் பணத்தைக் களவாடியதாக கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் சிறையைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். இதுதான் தமது மடானி அரசாங்கத்தின் நிலைபாடு என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்று சிரம்பானில் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற திறந்த இல்லா உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.