திவால் தாரர்களை விடுவிப்பதற்கு மேலும் இரண்டு சிறப்பு சலுகைகளை வழங்குவதற்கு ஏதுவாக 1967 ஆம் ஆண்டு திவால் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா ஒன்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் அஸாலினா ஒத்மான் சாய்ட் தெரிவித்துள்ளார்.
தாங்கள் பட்ட கடனை அடைக்க முடியாமல், மனோரீதியாக பாதிக்கப்பட்டு, மன நல மருத்துவமனையினால் உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் 70 வயதை கடந்த நிலையில், திவால் இலாகா தலைமை இயக்குநரால் சிபாரிசு செய்யப்பட கூடியவர்கள், திவாலான நிலையிலிருந்து விடுபடுவதற்கு இச்சட்டம் வகை செய்வதாக அஸாலினா விளக்கினார்.
திவாலானவர்களின் நலனை பாதுகாக்கவும், திவாலானவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான திவால் சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்து உரையாற்றுகையில் அஸாலினா இதனை தெரிவித்தார்.