கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில், பொது மக்களுக்குச் சொந்தமான 1,120 கோடி வெள்ளி இன்னுமும் கோரப்படாமல் இருப்பதாக துணை நிதி அமைச்சர் அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
தேசிய கணக்காய்வு துறையிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், 1,120 கோடி வெள்ளி கோரப்படாத தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று துணை அமைச்சர் விளக்கினார். அதில் 70 விழுக்காடு, ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் செயல்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகளில் உள்ள பணமாகும் என்று அகமட் மஸ்லான் குறிப்பிட்டார்.
தேசிய கணக்காய்வு துறையின் போர்டல் மூலம் கோரப்படாமல் இருக்கும் பணத்தைச் சரிபார்க்குமாறும், அப்பணத்தை கோருவதற்கு வழங்கப்பட்ட ஆவணங்களைப் பூர்த்தி செய்தால் பதினான்கு முதல் முப்பது நாட்களுக்குள் அந்தத் தொகையைத் திரும்பப் பெற முடியும் என்றும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.