பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகள் வேலையில்லாமல் திண்டாடிக்கொண்டிருப்பது அல்லது அவர்களின் தகுதிக்கு நிகரான வேலைகள் கிடைக்காமல் போவது என்பது இன்றைய இளையோர்கள் மத்தியில் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது.
மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் பல இன்னல்களைக் கடந்து படித்து முடித்து, பெற்றோர்களும் சிரமம் பாராது பிள்ளைகளின் கல்விக்கு வேண்டியவற்றைப் பூர்த்தி செய்து, இறுதியாக பட்டம் பெற்ற பின்னர் அவர்களில் பலருக்கு வேலை கிடைக்கவில்லை என்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

குறிப்பாக, தமிழ் மொழி துறையிலிருந்து வரும் பட்டதாரிகள் பெரும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். பல்கலைக்கழகத்தில் துறைச் சார்ந்து பயிலும் போது, அதில் இருந்த ஆர்வம், வேலை தேடி அலைவதிலேயே சோர்ந்து விடுவதாகவும், இந்த வேலையில்லா திண்டாட்டம் ஒவ்வொருவருக்கும், தலையாயப் பிரச்னையாக விளங்குவதாக சில இந்தியப் பட்டதாரி மாணவர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பெரும்பாலான நிறுவனங்களில், ஒரு வேலைக்காக பதியும் போதும் அல்லது வேலைத் தொடர்பாக நேர்முகப் பேட்டியில் பங்கெடுக்கும் போது, அங்கு கேட்கப்படும் முக்கியமான கேள்வி, இந்த துறையில் உங்களுக்கு எத்தனை ஆண்டுகள் அனுபவம் உள்ளது? வேறு எந்த நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறீர்கள்? இவ்வாறு அனுபவம் சார்ந்தே பல கேள்விகள் கேட்கப்படுகின்றன.
ஆனால், அந்த சம்பந்தப்பட்ட துறையில் படித்து முடித்து புதிதாக வேலை சந்தைக்கு வரும் இளையோர்களுக்கு வேலை அனுபவம் கிடையாது. அந்த அனுபவத்தை தேடித்தான், நாங்கள் வேலை சந்தைக்குள் நுழைகிறோம். அதற்கான அங்கீகாரம் எங்களுக்கு கிடைக்காமலேயே போய்விடுகிறது. எங்களைப் போல் உள்ள இளையோர்கள், புதியதாக வேலைக்கு வந்து, சம்பந்தப்பட்ட வேலையைக் கற்று, நன்கு உள்வாகிய பின்னரே அதன் அனுபவத்தை பெற முடியும் என்பதை சில நிறுவனங்கள் புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்று முன்னாள் மலாயாப் பல்கலைக்கழக மாணவர்களான ரவாங்கைச் சேர்ந்த மகேஸ்வரி, குளுவாங்கைச் சேர்ந்த டினேஸ்வரன், தெலுக் இந்தானைச் சேர்ந்த திவ்யதரிஷினி ஆகியோர் இன்னும் வேலையில்லா காரணத்தினால் தங்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
படித்த துறையைத் தவிர்த்து வேறு வேலைக்களுக்கு விண்ணப்பித்தாலும் அங்கும் இதே பிரச்னைகள்தான் நிலவுகின்றன. ஒரு துறையில் பட்டம் பெற்று, அதைச் சார்ந்த அறிவு மட்டுமே இருந்தால் போதாது, மாறாக அது தொடர்பான முந்தைய நிறுவனங்களில் பணியாற்றிய 3 அல்லது 4 ஆண்டுகள் அனுபவமுள்ள விண்ணப்பதாரர்களைப் பெரும்பாலான நிறுவனங்கள் விரும்புகின்றன. இப்படி எல்லாம் நிறுவனங்களும் வேலை அனுபவம் உள்ளவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்துவோம் என்ற நிலையில் இருந்தால், இந்த இளையோர்களின் நிலை மற்றும் அவர்களின் எதிர்காலாம் கேள்விக்குறிதானா? என்று பாகான் செராயைச் சேர்ந்த ஜெயமாலினி, கூலாயைச் சேர்ந்த நாகேஸ்வரி ஆகியோர் தங்களின் ஆதங்கத்தைக் கொட்டினர்.
கஷ்டப்பட்டு வேலை தேடி அலையும் பட்டதாரிகளுக்கு, ஒரேவொரு வாய்ப்பைத் தர நிறுவனங்கள் முன்வர வேண்டும். வேலை அனுபவமில்லா இளம் பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவதால், சம்பந்தப்பட்ட நிறுவனம், எந்த வகையில் நஷ்டத்தை எதிர்நோக்காது. ஏனென்றால், ஒவ்வொரு நிறுவனத்திலும், ஒரு தொழிலாளரை உறுதியாக வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பு, அவர்களுக்கு 3 மாதக் காலங்கள் பயிற்சி வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அத்துறையில் நன்கு வேலைகளைக் கற்று, அந்நிறுவனத்திற்கு லாபத்தை ஈட்டித்தரும் அதே வேளையில், போதிய அனுபவத்தை பெறுவார்கள் என்று அந்த முன்னாள் மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, இளம் பட்டதாரிகள் பணியில் அமர்த்தப்படுவதற்கு மொழி தேர்வும் ஒரு முட்டுக்கட்டையாக அமைவதாக மொழியியல் மாணவர்கள் தங்களின் கருத்துகளை முன்வைத்துள்ளனர். மொழித் தேர்வு என்று செல்லும் போது, வேலைக்கு விண்ணப்பம் செய்யும் தருணங்களில் அங்கே, தெரிந்த மொழிகள் என்ற தேர்வு கட்டத்தில், மலாய் மொழி, ஆங்கில மொழி மற்றும் மெண்டரின் மொழியும் தேர்வாக வழங்கப்பட்ட நிலையில், தமிழ் மொழி ஏன் அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை? தமிழ் மொழிக்கு ஏன் அந்த அங்கீகாரம் கொடுக்கப்பட வில்லை? என்ற கேள்விகள் தமிழ்ப் பிரிவு மாணவர்களிடையே அதிகம் எழுகின்றன.
ஆரம்பக் கல்வி முதல், பல்கலைக்கழகம் வரை தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முனையும் இளம் பட்டதாரிகள் என்ற முறையில், தனியார் நிறுவனங்களில் மற்ற மொழிக்கு வழங்கப்படும் முன்னுரிமையைத் தமிழ் மொழிக்கும் கொடுக்கலாம் என்பதை கோலக் கெட்டிலைச் சேர்ந்த பூவரசி, மலாக்காவைச் சேர்ந்த பெட்ரிஷா மற்றும் தெலுக் இந்தானைச் சேர்ந்த பிரேமி ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
மடாணி அரசாங்கத்தின் கீழ், பல்லினம் மக்கள் வாழும் இந்த நாட்டில், எல்லாம் மொழிகளும் சமமாக ஏற்றுக்கொள்ளப்படுவதோடு, தமிழ் மொழியின் பயன்பாட்டை நிறுவனங்கள் ஆதரிக்க வேண்டும். அதே வேளையில், வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க, அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இளம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.
அவசியம் ஏற்படும் பட்சத்தில் பட்டதாரி மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் கோட்டா முறை நிபந்தனை வழங்கப்பட வேண்டும், அல்லது பட்டதாரி மானவர்களைச் சேர்த்துக் கொள்ளும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் சில சலுகைகளை வழங்க வேண்டும். இதன் மூலம் அதிகமான நிறுவனங்கள் பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முன்வரலாம் என்று வேலை வாய்ப்பை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் முன்னாள் மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.
திசைகளின் சிறப்பு பேட்டி
– மாலதி சண்முகம்