
மலேசியாவின் கட்டுமானத்தில் இந்தியர்களின் அளப்பரிய பங்களிப்பும் அவர்களின் நிபுணத்துவமும் எந்த அளவிற்கு இருந்துள்ளது என்பதற்கு மற்றொரு சான்று லுமூட் கடற்படைத் தளமாகும்.
முப்படைகளில் ஒன்றான அரச மலேசிய கடற்படைக்குத் தலைமையேற்ற முதலாவது மலேசியர் என்ற பெருமைக்குரிய டான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ கே. தனபாலசிங்கம், கடற்படைத் துறையில் தாம் கொண்டுள்ள நிபுணத்துவத்தை நாடு எவ்வாறு பயன்படுத்திக்கொண்டது என்பதற்கு லுமூட் கடற்படைத் தளம் சாட்சியாக விளங்குகிறது.
மலாயா கடற்படையில் 1958 இல் இணைந்த தனபாலசிங்கம், இங்கிலாந்து டார்ட்மவுதில் உள்ள பிரிட்டானியா ராயல் நேவல் கல்லூரியில் (Britannia Royal Naval College) பயிற்சிப் பெற்றவர்.
மலேசியாவில் வியூகம் நிறைந்த ஒரு கடற்பகுதியில், அரச மலேசிய கடற்படைத் தளத்தைத் தேர்வுச்செய்வதற்கும், அதனை நிர்மாணிப்பதற்கும் தனபாலசிங்கம் எவ்வாறு உதவியிருக்கிறார் என்பதை இவ்வாறு விவரிக்கிறார்.
“நான் அரச மலேசிய கடற்படையின் தளபதியாக 1967 இல் எனது 31 ஆவது வயதில் பதவி ஏற்றேன். அப்போது, தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் நாட்டின் பிரதமராக இருந்தார். ராணுவப் படையின் உயர் பொறுப்பில் இருந்த பிரிகேட் ஜெனரல் சானி அப்துல் கபார், ஒரு நாள் என்னிடம் ஓர் அதிர்ச்சியான தகவலைக் கூறினார்.
சானி கூறிய அந்தத் தகவல் எதைப் பற்றியதாக இருக்கும் என்ற ஒரு சிந்தனையும் அப்போது எனக்கு இல்லை. அந்தச் சமயத்தில் கடற்படைத் தளபதியாக சானிதான் பொறுப்பேற்பதாக இருந்தது. அவர் ஒரு நேர்மையான மனிதர். அவரிடம் கடற்படைத் துறையில் போதுமான அனுபவம் இல்லை என்பதை உணர்ந்தவர்.
எனவே, அந்தப் பதவிக்கு நான் தலைமையேற்றால், சிறப்பாக இருக்கும் என்று கருதினார். கடற்படைத் தளபதி பதவிக்கு என் பெயரையே துங்குவிடம் பரிந்துரைத்திருக்கிறார்.
இது பற்றிய விஷயம் எனக்கு எதுவும் தெரியாது. ஒரு நாள் நாங்கள் கடமையாற்றிக்கொண்டிருந்த சமயத்தில் ஓர் நிகழ்வுக்குச் சென்றிருந்த போது, துங்கு அவர்கள், இந்தப் பதவியை எனக்கு வழங்குவதாக தெரிவித்தார்.
அந்த நேரத்தில், நான் சபா, தாவாவில் உள்ள கடற்படைத் தளத்தில் லெப்டினண்ட் கமாண்டர் பொறுப்பேற்று 4 மாதங்கள்தான் ஆகின்றன.
துங்கு தெரிவித்த இந்தச் செய்தி, எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது. நாட்டின் கடற்படைக்குத் தலைமையேற்றக்கக்கூடிய இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாரே, சரியாக வழிநடத்த முடியுமா என்ற ஒரு சிறு தடுமாற்றம் எனக்கு இருந்தாலும் இப்பணியைச் சிறப்பாக வழிநடத்த முடியும் என்ற திடமான நம்பிக்கை இருந்தது.
அரச மலேசிய கடற்படையின் தளபதியாக நான் பொறுப்பேற்ற பிறகு, துங்கு என்னிடம் ஒப்படைத்த மிகப் பெரிய பொறுப்பு, சிங்கப்பூரில் தலைமையகமாக கொண்டிருந்த மலேசியாவின் கடற்படைத் தளத்தை இங்கு மாற்றுவதாகும்.
அந்த நேரத்தில், மலேசிய கடற்படைத் தளத்தை இங்கு மாற்றுவதற்கு, துங்கு தேர்வு செய்த இடம் கோலக் கிள்ளான் ஆகும்.
ஆனால், என்னுடைய பரிந்துரையோ பேராக், மஞ்ஜோங் மாவட்டத்தில் உள்ள லுமூட் கடற்பகுதியாகும். ஆழமான கடல், போர்க்கப்பல்கள் போக்குவரத்திற்கு வியூகம் நிறைந்தப் பகுதி மற்றும் ஒரு கடற்படைத் தளத்தை அமைப்பதற்கான போதுமான இட வசதிகள் போன்றவை லுமூட்டில் காணப்பட்டன.
இதில், துங்குவிற்கு உடன்பாடில்லை. கோலக் கிள்ளானில் தான் கடற்படைத் தளம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அப்போது, நாட்டின் துணைப் பிரதமராக இருந்த துன் அப்துல் ரசாக், தற்காப்பு அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார்.
கடற்படைத் தளபதி என்ற முறையில், நான், ரசாக்குடன் கொண்டிருந்த நெருக்கமான நட்புறவின் காரணமாக, லுமூட்டை தேர்வு செய்ய துங்குவை மனமேற்குமாறு கேட்டுக்கொண்டேன்.
அதற்குப் பிறகு ஒரு நிகழ்வில் துங்குவைத் தனியாக சந்தித்து லுமூட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் தந்தேன். ஆனால், துங்கு தமது முடிவை மாற்றிக்கொள்வதாக இல்லை. அத்தருணத்தில் மே 13 கலவரம் மூண்டது. இதனால், சிங்கப்பூரிலிருந்து கடற்படைத் தலைமையகத்தை மலேசியாவிற்குத் மாற்றும் திட்டம் தள்ளி போய்க்கொண்டே இருந்தது.
கலவரத்திற்குப் பின்னர், நாட்டின் நிர்வாக நடவடிக்கைகளைத், தேசிய நடவடிக்கை மன்றம் ஏற்றது. அதன் இயக்குநராக ரசாக் பொறுப்பேற்றார். பிறகு, துங்குவிடமிருந்து நாட்டின் பிரதமர் பொறுப்பை ரசாக் ஏற்றது, எனது செயல்திட்டங்களுக்குச் சாதகமாக அமைந்தது. லுமூட்டில் கடற்படைத் தளத்தை அமைக்கும் திட்டத்திற்குப் பச்சைக் கொடி காட்டினார்.
இ.பி.யூ. எனப்படும் பொருளாதார திட்டமிடல் பிரிவின் வாயிலாக தேவையான உதவிகளையும் ரசாக் ஏற்பாடு செய்து தந்தார்.
ஒரு சிறந்த கடற்படைத் தளத்தை அமைப்பதற்கு, அதன் கட்டுமானப்பணியில் கைத்தேர்ந்தவர்கள் தேவைப்பட்டனர்.
இதற்கு நான் தேர்வு செய்தது, ஜெர்மனியின் நிபுணத்துவமாகும். காரணம், இரண்டாம் உலகப் போரின் போது, தரைமட்டமாக்கப்பட்ட தங்களின் கடற்படைத் தளத்தை மீண்டும் கட்டி எழுப்புவதில் அவர்கள் வெற்றிப்பெற்றவர்கள். அவர்களின் நிபுணத்துவத்துடன் எனது தலைமையில் லுமூட் கடற்படைத் தளம் நிர்மாணிக்கப்பட்டது என்பது வரலாறாகும்.
இன்று மலேசிய கடற்படையில் தலைமையகமாக லுமூட் விளங்குகிறது என்று விவரித்த தனபாலசிங்கம், 1967 முதல் 1976 வரை ஒன்பது ஆண்டுகளில் தலைமை பொறுப்பை ஏற்றிருந்த வேளையில், கடற்படைக்குத் தனித்துவமான அடையாளங்களை ஏற்படுத்தியவர்.
மலாயா கடற்படையின் கொடியானது, பிரிட்டிஷாரின் செயிண்ட் ஜார்ஜ் சிலுவை சின்னத்தைத் தாங்கியிருந்தது. நாட்டின் தற்காப்பு அரண்களில் ஒன்றான கடற்படையில் மதம் சார்ந்த சின்னங்கள் இருப்பதை தனபாலசிங்கம் விரும்பவில்லை. அச்சின்னத்திற்குப் பதிலாக, வெள்ளை நிறத்திலான கடற்படைக் கொடியின் இடப்புறத்தில் மலேசிய கொடியையும், வலப்புறத்தில் நங்கூரமும் அதன் மீது இரண்டு கிரீஸ் கத்திகளையும் வடிவமைத்தார்.
அவரின் சிந்தனையில் வடிவமைக்கப்பட்ட அச்சின்னம், இன்னுமும் மலேசிய கடற்படையின் அதிகாரத்துவ கொடியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு மேலாக, தனபாலசிங்கத்தின் மற்றொரு முக்கிய சாதனை இந்தோனேசியாவுடனான மோதல் முடிவுக்கு வந்தப்பின்னர், மலேசியாவின் கடல் எல்லையை 3 மைலிருந்து 12 ஆக நீடிக்கப்பட்டது.
கடற்படைத் தள்பதியாக 9 ஆண்டு கால சேவைக்குப் பிறகு, 1976 ஆம் ஆண்டு தமது 40 ஆவது வயதில் தனபாலசிங்கம் பணி ஓய்வுப் பெற்றார்.
அதே ஆண்டில், அப்துல் ரசாக் லண்டனில் மரணமடைந்ததைத் தொடர்ந்து துன் ஹுசேன் ஓன் நாட்டின் மூன்றாவது பிரதமராக பொறுப்பேற்ற போது, பணி ஓய்வுப் பெற்ற தனபாலசிங்கத்திற்கு வெளிநாட்டு தூதர் பதவியை வழங்க முன்வந்தார். எனினும், அந்த வாய்பை தனபாலசிங்கம் நிராகரித்துவிட்டார்.
அது ஒரு புதியத் துறை அல்ல. வெறும் 3 ஆண்டுகள் குறுகியக் கால பதவி என்பதால், அதனை தனபாலசிங்கம் ஏற்கவில்லை.
அரச மலேசிய கடற்படையில் உயர் பதவி வகித்த மற்றவர்களுக்கு வெவ்வேறு துறைகளில் வாய்ப்புகளும், பதவிகளும் வழங்கப்பட்டன. அது போன்ற பதவிகள் தமக்கு வழங்கப்படாதது ஏமாற்றமாக இருந்தாலும், அது குறித்து அவர் அதிகமாக அலட்டிக்கொள்ளாதது அவரின் தனித்துவ சிறப்பாகும்.
அன்றைய நாட்களில், அனைத்து இனங்களுக்கிடையே இருந்த ஒருவரையொருவர் மதிக்கும் மனப்பான்மை, விட்டுக்கொடுத்தல் போன்றவை இன்றைய நாளில், மலேசியாவின் அடையாளமாக காண முடியவில்லை. அதே வேளையில், கோட்டா முறை என்பதும் அன்றைய நாட்களில் இல்லை. திறமை மற்றும் ஆற்றல் அடிப்படையில் மக்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு, அனைவரும் ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாக உணவருந்தி, ஒன்றாகவே செயல்பட்டனர்.
தற்போது அத்தகைய குணாதிசயங்கள் நாட்டு மக்களிடையே அதிகமாக இல்லாத காரணத்தால், பலத் துறைகளிலும் பல விஷயங்களிலும் மலேசியா பின் தங்கி உள்ளதாக தனபாலசிங்கம் கூறுகிறார்.
மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, புதிய நகர்வுகளுடன் கடற்ப்டை தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான், அதன் செயல் திறன் காலத்துக்கு ஏற்ப மேலோங்க முடியும் தனபாலசிங்கம் நம்புகிறார்.
85 வயதை எட்டும் தனபாலசிங்கம், ஒரு பிரமச்சாரியாகவே வாழ்க்கையை கழித்துவிட்ட நிலையில், மலேசிய கடற்படைத் துறையில் தம்முடைய வாழ்வியல் போக்கு எவ்வாறு அமைந்தது என்பது குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், நூல் ஒன்றை வெளியிடும் முயற்சியிலும் தற்போது ஈடுப்பட்டுள்ளார்.

- சின்னத்தம்பி மதி