சூலு சுல்தான் வாரிசுதாரர்கள் தொடுத்த வழக்கில் மலேசியா வெற்றி

சூலு சுல்தான் வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொண்டு கும்பல் ஒன்று மலேசியாவிற்கு எதிராக 1,490 கோடி அமெரிக்க டாலர் அல்லது 6,259 கோடி வெள்ளியை இழப்பீட்டுத் தொகையை கேட்டு தொடுத்திருந்த வழக்கில் மலேசியா வெற்றி பெற்றுள்ளது.

சூலு சுல்தான் வாரிசுதாரர்களுக்கு மலேசியா, 6,259 கோடி வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று இவ்வாண்டு பிப்ரவரி மாதம் ஸ்பெயின் நடுவர் மன்றத் தலைவர் டாக்டர் கொன்ச்ஸோலோ ஸ்தம்பா வழங்கிய தீர்ப்பை நெதர்லாந்து, The Hague இல் உள்ள அப்பீல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளதாக பிரதமர் அறிவித்தார்.

லாவோஸிற்கு மேற்கொண்ட இரண்டு நாள் அதிகாரத்துவ வருகையை முடித்துக்கொண்டு பிரதமர் அன்வார், தலைநகர் Vientiane விலிருந்து கோலாலம்பூருக்கு திரும்புவதற்கு முன்னதாக மலேசிய செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

மலேசிய இறையாண்மைக்கு சவால் விடும் வகையில் சூலு சுல்தான் வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொண்ட கும்பல், பெரும் தொகையை இழப்பீடாக கேட்டு மேற்கொண்ட நீதிமன்ற நடவடிக்கையை மலேசியா இதன் வழி வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS