சூலு சுல்தான் வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொண்ட கும்பல் ஒன்று மலேசியாவிற்கு எதிராக தொடுத்திருந்த வழக்கில் அந்த கும்பலுக்கு மலேசியா 1,490 கோடி அமெரிக்க டாலர் அல்லது 6,259 கோடி வெள்ளியை இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பை நெதர்லாந்து, The Hague இல் உள்ள அப்பீல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருப்பது மூலம் சூலு வாரிசுதாரர்களின் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்ர் அசாலினா ஒத்மான் செயிட் தெரிவித்துள்ளார்.
சூலு சுல்தான் வாரிசுதாரர்களுக்கு மலேசியா, 6,259 கோடி வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று இவ்வாண்டு பிப்ரவரி மாதம் ஸ்பெயின் நடுவர் மன்றத் தலைவர் டாக்டர். கொன்சலோ சதம்பா வழங்கிய தீர்ப்பை நெதர்லாந்து, The Hague இல் உள்ள அப்பீல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்து இருந்தார்.
நெதர்லாந்து அப்பீல் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மலேசியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மலேசிய இறையாண்மைக்கு சவால் விடும் வகையில் சூலு சுல்தான் வாரிசுதாரர்கள் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளுக்கு இத்தீர்ப்பின் மூலம் ஒரு முடிவு கட்டப்பட்டுள்ளதாக அஸாலினா குறிப்பிட்டுள்ளார்.