தோட்டத் தொழிலாளர்களின் சமூக நல திட்டத்தை அந்தந்த தோட்டத்தில் உள்ள கமிட்டிகள் நேரடியாக களத்தில் இறங்கி கண்காணிக்க வேண்டும் என்று தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு தோட்டத்திலும் தோட்டத் தொழிலாளர் சங்கம் பிரதிநிதியாக சங்கத் தலைவர் மற்றும் கமிட்டிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
எனவே தோட்ட கமிட்டிகளின் பொறுப்பு ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று டத்தோ ஜி. சங்கரன் கேட்டுக் கொண்டார்.
மலாக்கா மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மாநில கமிட்டி கூட்டத்தை இன்று ஜாலான் துன் பேராக்கில் உள்ள மாநில அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றும் போது டத்தோ ஜி.சங்கரன் இதனை தெரிவித்தார்.
தற்போது விலைவாசி உயர்வு காரணத்தால் தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் போதுமானதாக இல்லை. எனவே சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர் சங்கம் இவ்விவகாரத்தை தொழிலியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே தோட்டத் தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படுவது தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கடமையாகும். அதற்கு ஒட்டு மொத்தமாக அனைவரது பங்களிப்பும், ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே நாம் வெற்றியை பதிவு செய்ய முடியும் என்றார் அவர்.
இந்த மாநில கமிட்டி கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் ஆறுமுகம் தற்போது மலாக்காவில் உள்ள தோட்டங்களில் வேலை செய்யும் அந்நிய நாட்டு தொழிலாளர்களை சங்கத்தில் அங்கத்துவம் பெற நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் காப்புறுதி அதிகாரி காளிதாஸ், மாநில தலைவர் என்.குமரன் மற்றும் மாநில கமிட்டிகள் கலந்து சிறப்பித்தனர்.