ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு கடும் போட்டியை வழங்கி வரும் மலேசியாவின் மற்றொரு சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைன், 6 மாத கால உள்ளூர் சேவைக்குப் பின்னர் இன்று ஜுன் 28 ஆம் தேதி முதல் முறையாக வெளிநாட்டுப் பயணத்தை தொடங்கியுள்ளது.
மைஏர்லைன்விமான நிறுவனத்தின் முதலாவது வெளிநாட்டு விமானச் சேவையாக தாய்லாந்து தலைநகர் பேங்காக் அமைந்துள்ளது. இன்று காலையில் கோலாலம்பூருக்கும் பேங்காக், சுவர்னபூமி அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையில் தனது முதலாவது பன்னாட்டு விமானச் சேவையை மைஏர்லைன் தொடங்கியிருப்பதாக அதன் தலைமை நிர்வாக செயல்முறை அதிகாரி ரேய்னர் தியோ தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் ஜுன் 30 ஆம் தேதி கோலாலம்பூருக்கும் பேங்காக், டோன் மோஎங் விமான நிலையத்திற்கும் இடையில் மற்றொரு புதிய விமானச் சேவையை மைஏர்லைன் தொடங்குவதாக ரேய்னர் தியோ குறிப்பிட்டார். கோலாலம்பூரிலிருந்து ஒரே வழித்தடத்தில் பேங்காக்கில் இரண்டு வெவ்வேறு விமான நிலையத்திற்கு மைஏர்லைன், பன்னாட்டுச் சேவைக்கான தனது சிறகை விரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.