நாட்டிற்கு தலைமையேற்க வேண்டும்,பிரதமராக வர வேண்டும் என்பது தமது நீண்ட கால கனவாகும் என்று பகிரங்கமாக தமது லட்சியத்தை அறிவித்துள்ள அம்னோ முன்னாள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான கே.ஜே. எனப்படும் கைரி ஜமாலுடின், அம்னோவுடன் இணைந்து இருந்தால் மட்டுமே அவரின் லட்சியம் சாத்தியமாகும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் தூதரின் மகனான குவைத்தில் பிறந்தவரான 47 வயது கைரி ஜமாலுடின், சிறந்த தலைமைத்துவ ஆளுமையை கொண்டுள்ளவர். எதையும் மிகத் தெளிவாக, கவனமாக பேசக்கூடியவர் என்று ஒரு காலத்தில் புகழப்பட்டவர்.
டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பதவி விலகலுக்கு பிறகு அம்னோவிற்கு அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையேற்றப்பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பல கசப்பான சம்பவங்கள், அம்னோவிலிருந்து கைரியின் பாதையை திசைதிரும்பியது.
பொறுமையை கையாள இயலாமல் அம்னோ தலைமைத்துவத்திற்கு எதிராக அவர் வெளியிட்ட எதிர்மறையான பல அறிக்கைகள் அவரின் அரசியல் பின்டைவுக்கு காரணமாக அமைந்தன. கைரியின் எதிர்கால அரசியல் வளம் என்பது இன்னமும் அம்னோவுடன்தான் உள்ளது. அவர் அம்னோவிற்கு திரும்பினால் மட்டுமே தனது எதிர்கால அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.