நாட்டின் பிரதமர் என்ற முறையில் தாம் யாருடைய கைப்பாவையாக இருந்ததில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வார், டிஏபியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்றும் அந்த கட்சியின் கைப்பாவையாக மாறியுள்ளார் என்றும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நேற்று கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பிரதமர் அன்வார் இன்று பதில் அளித்தார்.
தமது தலைமைத்துவ ஆளுமைய சிறுமைப்படுத்தும் வகையில் தமக்கு எதிராக சுமத்தப்படும் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இனி தாம் மவுனம் சாதிக்கப் போதில்லை என்றும் மாறாக, அவற்றுக்கு பதிலடி கொடுக்கப் போவதாகவும் அன்வார் சூளுரைத்தார்.
நடப்பு ஒற்றுமை அரசாங்கத்தில் டிஏபிக்கு 4 அமைச்சர் பதவிகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், அக்கட்சியின் சார்பில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
டிஏபி விலகினால் அன்வாரின் அரசாங்கம் கவிழும். எனவேதான் அதிகாரப்பூர்வ மதம் இல்லாத மதச் சார்பற்ற நாடாக மாற்ற வேண்டும் என்பது உட்பட டிஏபியின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் அன்வார் நிறைவு செய்ய வேண்டியிருக்கிறது என்று துன் மகாதீர் முகமட் நேற்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த பிரதமர் அன்வார், தமக்கு 76 வயதாகிறது என்றும் தம்மை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என்றும் அப்படி விலை கொடுத்து தம்மை வாங்க முடியும் என்றால் அது எப்பொழுதே நடந்து இருக்கும் என்றும் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற விவாத மேடையில் தெளிவுபடுத்தினார்.