மோட்டார் சைக்கிளில் வந்த ஆடவர், ஒரு வீட்டை நோக்கி சரமாரியாக கைத்துப்பாக்கியினால் சுட்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். பேரா, குவால குரௌ, குவால குல என்ற இடத்தில் ஒரு வீட்டின் முன் நேற்று அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் துப்பாக்கி வேட்டுச் சத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை ஆறு பேர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
மழைக்கு அணியும் ரேன்கோட் மேலாடையை அணிந்திருந்த அந்த ஆடவர், சம்பந்தப்பட்ட வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, வீட்டை நோக்கி ஐந்து முறை சுட்டதாக கூறப்படுகிறது. அந்த துப்பாக்கி குண்டுகள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிந்த காரையும், வீட்டின் சுவரையும், கண்ணாடி பேழையையும் துளைத்து இருந்ததாக பேரா மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ செரி முகமட் யுஸ்ரி ஹாசான் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆடவர் இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கு 9 எம்.எம். ரக தோட்டாக்களை பயன்படுத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.