- புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் மகஜர்
ஒரு திருநங்கையான 24 வயது சஞ்சனா மரணம் தொடர்பில் போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, அவரின் குடும்பத்தினர், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். சஞ்சனா மரணத்தில் குற்றத்தன்மையில்லை என்று போலீசார் கூறிய போதிலும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.
ஜோகூர், மாசாயை சேர்ந்த சஞ்சாய் காந்தி என்று இயற்பெயர் கொண்ட சஞ்சனா,கடந்த ஜுன் 8 ஆம் தேதி கிள்ளானில் தாம் தங்கியிருந்த அடுக்குமாடி வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த கொண்டதாக கூறப்படுகிறது.
எனினும் சஞ்சா தற்கொலை செய்து கொள்ளவில்லை. சஞ்சனாவுடன் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்த 27 வயது நபரால் அடித்து துன்புறுத்தப்பட்ட நிலையில் தூக்கில் தொடங்கவிடப்பட்டுள்ளார் என்று தாங்கள் சந்தேகிப்பதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சையின் மூலம் ஒரு பெண்ணைப் போல தனது தோற்றத்தை மாற்றிக்கொண்ட சஞ்சனாவின் மரணத்தில் தங்களுக்கு நீதி வேண்டும் என்று அந்த திருநங்கையின் அத்தை 69 வயதான கே. இந்திரா கோரிக்கை விடுத்துள்ளார். சஞ்சனா இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு மிக சந்தோஷமாக தமது குடும்பத்தினருடன் பேசியுள்ளார். வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக குறிப்பிட்டார். வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டவர் எவ்வாறு திடீரென்று தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும் என்று இந்திரா கேள்வி கேள்வி எழுப்பினார்.
மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீ ரமேஷ் ஏற்பாட்டில் காப்பார் முன்னாள் எம்.பி.யும், பார்ட்டி ராக்யாட் மலேசியா கட்சியின் உதவித் தலைவருமான எஸ். மாணிக்கவாசகம் மூலமாக இந்த மகஜர் இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரியிடம் வழங்கப்பட்டது.