சபா, துவாரானில் தாங்கள் பயணம் செய்த படகு, ஆற்றோரத்தில் உள்ள பனைமரத்தின் வேர்களில் சிக்கி, நிலைக்குத்தியதில் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த 14 சுற்றுப்பயணிகள், நள்ளிரவில் சிக்கி சுமார் 4 மணி நேரம் பெரும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவம் நேற்று இரவு 9.00 மணியளவில் சுஙாய் போலோங் என்ற இடத்தில் நிகழ்ந்தது. இது தொடர்பாக இரவு 9.30 மணியளவில் அவசர அழைப்பை பெற்ற தீயணைப்பு, மீட்புப்படையினர் அந்த சதுப்புநிலக் காட்டுப் பகுதியை நோக்கி சென்ற போது, ஒன்பது பெண்களும், நான்கு ஆண்களும், ஒரு சிறாரும், படகிலிருந்து வெளியேற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியிருந்தனர்.
பின்னர் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் அந்த கொரிய நாட்டு சுற்றுப்பயணிகள் பாதுகாப்பாக மீனவர்களின் படகில் ஏற்றப்பட்டு, கரைக்கு கொண்டு வரப்பட்டதாக துவாரான் மாவட்ட தீயணைப்பு, மீட்புப்படைத் தலைவர் முஹமாட் அப்துல் காவீ அப்துல் காப்பார் தெரிவித்தார்.