கடையில் பொருட்களை திருடியதாக நம்பப்படும் சிறுமி ஒருவரை கண்டித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மனைவி ஆடவர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பினாங்கு, பாயான் லெப்பாஸ், ஜாலான் டத்தோ இஸ்மாயில் ஹாஷிம் சாலையில் உள்ள ஒரு கடையில் நிகழ்ந்தது. பாயான் லெப்பாஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அஸ்ருல் மகாதீர் அஸிஸ்ஸின் மனைவி நோர்ஹைலீ ரசிட் என்பரே இச்சம்பவத்தில் தாக்கப்பட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
பல்பொருள் விற்பனை கடைக்குள் நுழைந்த சிறுமி ஒருவர், அக்கடையின் பொருட்களை திருடி, தனது கைப்பைக்குள் வைத்துக்கொண்டு இருப்பதை பார்த்த அந்த சட்டமன்ற உறுப்பினரின் மனைவியான 48 வயதுடைய நோர்ஹைலீ,அச்சிறுமியை கண்டித்தார். அந்த சிறுமி அகப்பட்டு விடும் என்ற பயத்தில் பொருட்களை களவாட வேண்டாம் என்று கூறி கண்டித்ததைத் தொடர்ந்து அச்சிறுமி அங்கிருந்து ஓடிவிட்டார். சிறிது நேரத்தில் தமது தந்தை என்று நம்பப்படும் ஓர் ஆடவருடன் அந்த சிறுமி கடைக்கு திரும்பி வந்துள்ளார். அந்த நபர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மனைவியை தலையிலேயே அடித்து விட்டு, அங்கிருந்து தப்பியுள்ளார். இச்சம்பவம் அக்கடையில் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது.