நாட்டில் அடிதட்டு மக்கள் பிரச்னை, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களை முன்னெடுப்பதில் முதன்மை அரசியல் கட்சியாக விளங்கும் பிஎஸ்எம் எனப்படும் மலேசிய சோசலிஷ கட்சி, சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தனது முதல் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிஎஸ்எம் கட்சியின் முன்னணி போராட்டவாதிகளில் ஒருவரான அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் சிவரஞ்சனி மாணிக்கம், காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட மேரு சட்டமன்றத்தொகுதியில் களம் இறக்கப்படுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 42 வயது சிவரஞ்சனி, “கோலா” என்று அழைக்கப்படும் கோலக்கிள்ளானில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். பல்கலைக்கழகத்தில் ‘மாணவர் சமூக நல அணி’ வாயிலாக தோட்டப்புறங்களுக்கு சென்று தம்மை சமூகப்பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டவரான சிவரஞ்சனி பிஎஸ்எம் கட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர் நலப்பிரிவில் சேவையாற்றி வருகிறார்.
தொழிலாளர்கள் சம்பந்தப் போராட்டங்கள், பூர்வக்குடி மக்களின் பிரச்னை , வீட்டுரிமை விவகாரம், ஏழை விவசாயிகளின் நில உரிமை, அரசு மருத்துவமனைகளில் குத்தகைத் தொழிலாளர்களின் பிரச்னை என மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களில் முன்னிலைப்படுத்தும் சிவரஞ்சனி, தொழிலாளர்களுக்கான 1,500 வெள்ளி குறைந்த பட்சம் சம்பளப் போராட்டத்தில் நாட்டு மக்களின் கவன ஈர்ப்புக்கு ஆளானார்.