வரும் ஜுலை 21 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரையில் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 11 ஆவது உலகத் தமிழாராச்சி மாநாட்டிற்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று அனைத்துலகத் தமிழாராச்சி நிறுவனத்தின் மலேசிய அமைப்பின் தலைவர் முனைவர் ந. கந்தசாமி அறிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் நடத்தப்படும் தமிழாராச்சி மாநாடு, அனைத்துலகத் தமிழாராச்சி நிறுவனம், இந்தியா அமைப்பின் மேற்பார்வையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இதற்கு சில அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அனைத்துலக தமிழாராச்சி நிறுவனம், மலேசிய அமைப்பின் ஏற்பாட்டிலேயே இந்த மாநாடு நடைபெறுகிறது என்று கருதி, சிலர் தங்களுடன் தொடர்பு கொண்டு வருவதாக முனைவர் கந்தசாமி குறிப்பிட்டார்.எனினும் இந்த மாநாட்டிற்கும், அனைத்துலகத் தமிழாராச்சி நிறுவனம், மலேசிய அமைப்பிற்கும் எவ்வித தொடர்பு இல்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
1966 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் தலைமையில் முதலாவது உலக தமிழாராச்சி மாநாடு சிறப்பாக நடந்தேறியது முதல்2015 வரையில் ஒவ்வொரு மாநாட்டிற்கும் அனைத்துலகத் தமிழாராச்சி நிறுவனம், மலேசிய அமைப்பு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருப்பதை பத்திரிகைகளுக்கு வழங்கிய அறிக்கையில் முனைவர் ந. கந்தசாமி சுட்டிக்காட்டியுள்ளார்