ஒரு கல்விமானும், சமூகப் போராட்டவாதியுமான பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, தாம் அங்கம் வகித்து வந்த டிஏபி கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரின் விலகல் , உடனடியாக அமலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளார். பினாங்கு மாநில டிஏபியின் துணைத் தலைவரான 74 வயது டாக்டர் இராமசாமி, தமது ராஜினாமா கடிதத்தை, டிஏபியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கிற்கு அனுப்பி விட்டதாக குறிப்பிட்டார்.
மூன்று தவணைக்காலம் பினாங்கு, பிறை சட்டமன்றத் தொகுதியை தற்காத்து வந்த டாக்டர் இராமசாமி, நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு, டிஏபியின் தலைமைத்தவத்தினால் மறுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகிறார். தமக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து தாம் கவலைப்படவில்லை என்பதையும் டாக்டர் இராமசாமி தெளிவுப்படுத்தினார்.
ஆனால், பினாங்கு மாநில டிஏபியின் துணைத் தலைவர் பொறுப்பு வகிக்கும் தாம், அந்த பொறுப்புக்குகூட மரியாதை அளிக்கப்படாமல் , மாநிலத்தில் டிஏபி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை முடிவு செய்துவிட்டு, கடைசி நேரத்தில் தம்மிடம் தெரியப்படுத்தியது, எந்த வகையில் நியாயம்,
கட்சியில் தமக்கு என்ன மரியாதை என்று கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து டிஏபியில் உறுப்பினராக இருந்து வரும் டாக்டர் இராமசாமி கேள்வி எழுப்பினார். இது முழுக்க முழுக்க ஒரு சதிச் செயலாகும் என்று டாக்டர் இராமசாமி தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பகான் டாலாம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி, பிறை சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் மார்ஷல் மற்றும் இதர ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.