கூலிம் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்

கெடா, கூலிம் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் அவாங் தெஹ் லியான் ஓங், தேர்தலையொட்டி தாங்கள் வெளியிட்டுள்ள தேர்தல் கொள்கை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் யாவும் , கூலிம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் கெடா மாநில பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெற்று, மாநில அரசாங்கத்தை கைப்பற்றுமானால் மத்தியில் ஆட்சி செய்து வரும் ஒற்றுமை அரசாங்கத்துடன் மாநில அரசாங்கம் இணைந்து இருக்கும் பட்சத்தில் அதிமான அனுகூலங்களை மக்கள் பெற முடியும் என்று தெஹ் லியான் ஓங் குறிப்பிட்டார்.


குறிப்பாக, உள்ளூர் பொருளாதார அறக்கட்டளையை வலுப்படுத்தி, அந்நிய முதலீட்டை அதிகரித்தால் கூலிம் வட்டார மக்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெஹ் லியான் ஓங் சுட்டிக்காட்டினார்.

கூலிம் வட்டாரத்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் அதேவேளையில் குலிம் ஜுன்ஜோங் என்ற இடத்தில் “பெலக் தோம்” என்ற டுரியான் மையமாக மாற்றி அமைப்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்று தெஹ் லியான் ஓங் உறுதி அளித்தார்.

கூலிம் வட்டார மக்கள் டிஜிட்டல் கல்வியை பெறுவதற்கு அதற்கான பயிற்சி வகுப்புகள் மேம்படுத்தப்படும். அதுமட்டுமின்றி கிராமப்புறங்களில் விளையாட்டு மற்றும் பொழுதுப் போக்குக்குரிய திட்டங்கள் கொண்டு வரப்படும். தவிர கூலிம் வட்டார சந்தைகளின் தரம் உயர்த்தப்படும் என்பதுடன் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று தெஹ் லியான் ஓங் அறிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS