நெகிரி செம்பிலான், லோபாக் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு இரண்டாவது தவணையாக டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் சியு சே யோங், இன்று சிரம்பான், ராசாவில் உள்ள சாய் பாபா மையத்திற்கு வருகை புரிந்தார். அந்த மையத்தின் நிர்வாகப் பொறுப்பாளர்களின் அழைப்பை ஏற்று வருகை தந்த சியு சே யோங் கிற்கு மாலை மற்றும் பொன்னாடைப் போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது. அதேவேளையில் தீபாரதனை நிகழ்விலும் சியு சே யோங் கலந்து கொண்டு சாய் பாபாவை வழிபட்டார்.
அந்த மையத்தின் நடவடிக்கைகள் குறித்து சியு சே யோங் கிற்கு மலேசிய இந்து சங்கத்தின் நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் சிவ ஸ்ரீ டாக்டர் ஏ.எல். ஆனந்தகோபி சிவச்சாரியார் விளக்கம் அளித்தார்.
சாய் பாபா மையத்தின் சமூகவியல் நடவடிக்கைகளுக்கான சேவைகளை நேரில் பார்த்த சியு சே யோங், மகிழ்ச்சி தெரிவித்ததுடன், தமது வியப்பையும் வெளிப்படுத்தினார்.
குறிப்பாக, அந்த மையத்திற்கு வருகின்றவர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளில் இலவசமாக உணவு வழங்கும் சேவை, போற்றுதலுக்குரியதாகும் என்று சியு சே யோங் குறிப்பிட்டார்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மாநில அரசாங்கத்தை தற்காத்துக்கொள்ளும் அதேவேளையில் லோபாக் தொகுதியில் தம்மை வெற்றிப் பெறச் செய்வது மூலம் இந்த சாய் பாபா மையத்திற்கு தேவையான உதவிகளும், மாநில அரசின் மூலமாக கணிசமான நிதி உதவியையும் பெற்று தருவதாக சியு சே யோங் உறுதி அளித்தார்.