
தகவல் அறிந்த ஒரு சமுதாயமாக தோட்டத் தொழிலாளர்கள் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு மாநில தோட்டத் தொழிலாளர் சங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்கள் தொடரப்பட வேண்டும் என்று தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, ஒரு தோட்டத்தில் பொறுப்பு வகிக்கும் தோட்ட தொழிற்ச்சங்க தலைவர் மற்றும் செயலாளர் நடப்பு சட்ட விதிப்படி ஒரு தொழிலாளரின் நலன் என்ன என்பதை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று டத்தோ ஜி. சங்கரன் வலியுறுத்தினார்.
நேற்று காலை ஜொகூர் குளுவாங் நகரில் உள்ள ஹோட்டல் மெர்டொக்காவில் ஜொகூர் மாநிலத்தில் உள்ள எல்லா தோட்டம் மற்றும் செம்பனை எண்ணெய் ஆலையை சேர்ந்த தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கான தலைமைத்துவப் பயிற்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது டத்தோ ஜி.சங்கரன் இதனை வலியுறுத்தினார்.
இந்த தலைமைத்துவப் பயிற்சியில் பதிவு இலாகா, தொழிலியல் துறை இலாகா மற்றும் சமூக நல பாதுகாப்பு துறை தொடர்பான தகவல்கள் கட்டாயம் இன்று கலந்துக் கொண்டுள்ள பொறுப்பாளர்களுக்கு நன்மையை அளிக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். தவிர தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்தில் என்றுமே அரணாக விளங்கி வரும் என்று பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன் உறுதி கூறினார்.
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஏ.நவமுகுந்தன் தமது உரையில்
தோட்டத் தொழிலாளர் சங்கம் அன்றும், இன்றும், இனி என்றும் அதன் கட்டமைப்பு பாதையில் சரியாக பயணிப்பதற்கு தோட்டத் தொழிலாளர்களின் ஒன்று பட்ட ஆதரவு தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜோகூர் மாநிலத் தலைவர் கே.முருகவேல் மற்றும் மாநில செயலாளர் ஏ.முத்தமிழ்வாணன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தலைமைத்துவப் பயிற்சியில் அண்மையில் அகால மரணமுற்ற கெராத்தோங் செம்பனை ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர் ஒருவரின் மனைவிக்கு எ.ஐ.எ – க்ரேட் ஈஸ்டர்ன் காப்புறுதி மூலமாக மொத்தம் 29 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை டத்தோ ஜி.சங்கரனும், ஏ.நவமுகுந்தனும் வழங்கினர்.