பினாங்கு, பிறை சட்டமன்றத் தொகுதியில் டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக சுந்தரராஜு சோமு போட்டியிடுகிறார். ஒரு புதிய முகமான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சுந்தரராஜு சோமு , பிறை தொகுதியில் 4 முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் கெராக்கான் கட்சியைச் சேர்ந்த சிவசுந்தரம் ராஜலிங்கம், மூடா கட்சி சார்பில் விக்னேஸ்வரி ஹரிகிருஷ்ணன், இவர்களோடு சேர்ந்த செபராங் பிறை நகராண்மைக் கழக முன்னாள் உறுப்பினர் டேவிட் மார்ஷலும் களத்தில் இறங்கியுள்ளார். டிஏபி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள சுந்தரராஜு சோமு, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சொத்துடைமைத்துறையில் ஈடுபட்டு, வெற்றி கண்ட ஒரு மேம்பாட்டாளர் ஆவார். எகோ வேர்ல்ட் டெவலப்மென்ட் எஸ்டிஎன், பிஎச்டி,எஸ்பி செத்தியா குருப் புரோப்பெர்ட்டி போன்ற நிறுவனங்களில் மிக உயரிய பொறுப்பு வகித்த இந்தியர்களில் முக்கியமானவராக சுந்தரராஜு சோமு திகழ்கிறார். இதற்கு மேலாக அரசு சார்பு நிறுவனமான மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் பெர்படனான் அசெட் கெரெத்தா ஆப்பியிலும் வாரிய உறுப்பினராக இருந்து, சுந்தரராஜு சோமு சேவையாற்றியுள்ளார். 20,479 பதிவு பெற்ற வாக்காளர்களைக் கொண்ட பிறை சட்டமன்றத் தொகுதியில் தங்களின் நம்பிக்கை நட்சித்திரமாக சுந்தரராஜு சோமுவை டிஏபி களம் இறக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பினாங்கு மாநிலத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பல செயல்பாடுகளை மேற்கொண்டு நன்கு அறிமுகமானவராக சுந்தரராஜு சோமு திகழ்கிறார். சொந்தமாக வணிகத் துறையில் கடுமையாக உழைத்து முன்னேறியவர். பிறை தொகுதியில் சுந்தரராஜு சோமுவின் வெற்றியின் மூலம் பினாங்கு மாநில அரசில் உயரிய பதவி காத்திருப்பதாக கூறப்படுகிறது.