தனது அண்ணனை கொலை செய்ததாக 17 வயது ஓர் இந்திய இளைஞர் கூலிம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார். மாஜிஸ்திரேட் ஸ்ரீ பிரச நந்தினி பலபேடா முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த வயது குறைந்த இளைஞருக்கு எதிரான கொலை குற்றசாட்டு தமிழில் வாசிக்கப்பட்டது. எனினும் இவ்வழக்கு விசாரணை அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அந்த இளைஞரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை 10.10 மணியளவில் 21 வயதுடைய தங்கள் சகோதரர் வீட்டுக்கு அருகில் உள்ள ஆட்டுப்பண்ணையில் தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக போலீசில் பொய் புகார் செய்து நாடகமாடிய கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள 17 வயது இளைஞர் மற்றும் அவரின் 27 வயதுடைய மூத்த சகோதரர் ஆகியோரின் இந்த கொலையை போலீசார் கண்டு பிடித்ததைத் தொடர்ந்து 17 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தமக்கும் தமது அண்ணனுக்கும் இடையில் நடந்த சண்டையில் தமது சகோதரரின் மார்பகத்தில் கத்தியால் குத்தி கொன்றதாக அந்த வயது குறைந்த இளைஞர் மீது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில் இந்த கொலையை மறைப்பதற்கு போலீசில் பொய் புகார் செய்த குற்றத்திற்காக அந்த இளைஞரின் 26 வயது மூத்த சகோதரருக்கு நீதிமன்றம் 1,500 வெள்ளி அபராதம் விதித்தது.