தமது கிரெடிட் கார்ட் அட்டையில் செலவிடுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையின் உச்ச வரம்பை சுயமாக மாற்றியமைத்து, மோசடி புரிந்ததாக மேபேங்க் அதிகாரி ஒருவர், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். 44 வயது அபாஸ் சுலைமான் என்ற அந்த வங்கி அதிகாரி, கடந்த 2022 ஏப்ரல் மாதத்திற்கும் ஜுன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் கோலாலம்பூர், ஜாலான் டாங் வாங்கி -யில் உள்ள மெனாரா மேம்பேன்ங் கட்டடத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி பிரிசில்லா ஹேமமாலினி நடராஜன் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அபாஸ் சுலைமான், கிரெடிட் லிமிட் உச்சவரம்பை மாற்றியமைப்பற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை என்ற போதிலும் நோக்கத்துடன் இக்குற்றத்தை புரிந்துள்ளதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 7 ஆண்டு சிறை அல்லது ஒரு லட்சம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகைசெய்யும் 1997 ஆம் ஆண்டு கணினி குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த வங்கி அதிகாரி குற்றஞ்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.