- அப்பீல் நீதிமன்றத்தில் கூட்டரசு வழக்கறிஞர் கடும் வாதம்
தாய்மொழி தொடக்கப்பள்ளிகளில் தேசிய மொழியான மலாய் மொழி, ஒரு கட்டாயப்பாடாக இருக்கின்ற காரணத்தினால் தாய்மொழிப்பள்ளிகளில் தமிழ், சீன மொழிகள் போதனா மொழியாக பயன்படுத்தப்படுவது, நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது அல்ல என்று மலேசிய அரசாங்கம் மற்றும் கல்வி அமைச்சு சார்பில் ஆஜரான கூட்டரசு வழக்கறிஞர் லியோ ஹோங் பின், புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்டார்.
நாட்டில் உள்ள அனைத்து மொழிப்பள்ளிகளும் அரசாங்க கல்விக்கொள்கைக்கு ஏற்ப ஒரே பாடத்திட்ட முறையை கொண்டு இருக்கின்ற காரணத்தினால் தாய்மொழிப்பள்ளிகளில் தமிழ், சீன மொழிகள் பயிற்றுவிக்கும் மொழியாக பயன்படுத்தப்படுதவால் எந்தவொரு தரப்பினருக்கும் பாதிப்போ, அல்லது இழப்போ இல்லை என்ற கூட்டரசு வழக்கறிஞர் லியோ தமது ஒன்றரை மணி நேர வாதத்தில் தெளிவுபடுத்தினார்.
தமிழ், சீனப்பள்ளிகள் சட்டவிரோதமானவை என்றும் அப்பள்ளிகள் தமிழ், சீன மொழிகளை போதனா மொழியாக பயன்படுத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் அறிவிக்கும் அதேவேளையில் அந்த தாய் மொழிப்பள்ளிகள் சட்டத்திற்கு உட்பட்டவை என்று அறிவித்து இருக்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முஹமாட் நஸ்லான் முஹமாட் கசாலியின் தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் 4 மலாய் அமைப்புகள் அப்பீல் நீதிமன்றத்தில் செய்த கொண்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் நேற்று கூட்டரசு வழக்கறிஞர் லியோ ஹோங் பின்மேற்கண்ட வாதத்தை முன்வைத்தார்.
அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ சுப்பாங் லியான் தலைமையில் நீதிபதிகள் டத்தோ எம்.குனாலன் மற்றும் டத்தோ அஸிசுல் அஸ்மி அடான் ஆகியோரை உள்ளடக்கிய மூவர் கொண்ட நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்ற இந்த மேல்முறையீட்டு வழக்கில் தொடர்ந்து தமது வாதத்தை முன்வைத்த கூட்டரசு வழக்கறிஞர் லியோ, தாய்மொழிப்பள்ளிகளில் போதனா மொழியாக தமிழ், சீன மொழி பயன்பாடு வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனை கூட்டரசு அரசியலமைப்புச்சட்டம் 152 ஆவது பிரிவில் மிக தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டு இருப்பதையும் விளக்கினார்.
சுருங்கச் சொன்னால், வரலாற்று ஆவணங்கள் மற்றும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு மிக ஆழமாக ஆராயப்பட்டதில் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 152 ஆவது பிரிவு, தாய்மொழிப்பள்ளிகளுக்கு சரியான புரிதலை வழங்குகிறது. மலாய்மொழி நாட்டின் தேசிய மொழியாக முன்னிலைப்படுத்தும் அதேவேளையில் வரலாற்றில் ஓர் அங்கமாக தமிழ் , சீனப்பள்ளிகள் செயல்படுவதற்கும், அவற்றை பாதுகாப்பதற்கும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது.
"நாம் வரலாற்றால் உருவாக்கப்பட்டவர்கள். நாம் யார், எதற்காக இங்கு இருக்கிறோம் என்பதை வரலாறுகள்தான் உணர்த்துகின்றன. அந்த வரலாற்றை ஒரு போதும் புறந்தள்ளி விட முடியாது" என்று கூட்டரசு வழக்கறிஞர் லியோ, தமது வாதத்தில் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
தமிழ், சீனப்பள்ளிகளின் தோற்றம், அவற்றின் செயல்பாடுகள், தமிழ், சீனம் ஆகியவற்றை பயிற்று மொழியாக கொண்ட தாய்மொழி போதனையை உள்ளடக்கிய கல்வி முறை ஆகியவை கூட்டரசு அரசியலமைப்புச்சட்டம் 152 ஆவது பிரிவுக்கு முரணானவை அல்ல என்று கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முஹமாட் நஸ்லான் அளித்த தீர்ப்பு இருற்தார்.
அந்த தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரி,மாப்பிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய கல்வி மேம்பாட்டு மன்றம், கப்பெனா எனப்படும் தேசிய மலாய் எழுத்தாளர்கள் சங்கங்களின் சம்மேளனம்,இஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லீம் கூட்டமைப்பு மற்றும் ஐ குரு எனப்படும் மலேசிய முஸ்லிம் ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஆகிய 4 மலாய் அமைப்புகள் கடுமையாக போராடி வருகின்றன.
வழக்கின் வாதிகளான அந்த 4 மலாய் அமைப்புகளும் தங்களின் இந்த மேல்முறையீட்டு மனுவில் மலேசிய அரசாங்கம், மலேசிய கல்வி அமைச்சு உட்பட 13 தரப்பினரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளன.
டொங் சொங் எனப்படும் மலேசிய சீனப்பள்ளிகள் மேலாண்மை வாரியம், ஜியோ சொங் எனப்படும் மலேசிய சீனப்பள்ளிகளின் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம்,மலேசிய தமிழ்ச் சங்கம், பேரா மாநில தமிழர் திருநாள் குழு,மலேசிய தமிழ்மொழி கழகம், தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் சம்மேளனம் ஆகியவை அந்த 13 பிரதிவாதிகளில் அடங்கும்.