பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து டிஏபி சின்னம் இல்லை

மத்திய அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய நிதி உதவி மற்றும் மானியம் தொடர்பான காசோலை அட்டைகளில் அரசியல் கட்சிகளின் சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிறபித்துள்ள உத்தரவு, கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமரின் இந்த உத்தரவானது அனைத்து அமைச்சர்களுக்கும், எம்.பி.க்களுக்கும் பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய நிதியானது, தனி நபர்கள் அல்லது அரசியல் கட்சிகளுக்கு சொந்தமானது அல்ல என்பதை பிரதமர் பொருத்தமான நேரத்தில் நினைவூட்டியிருப்பதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பேரா மாநிலத்தில் சீனப்பள்ளிகள் சிலவற்றுக்கு மத்திய அரசாங்கம் வழங்கிய நிதி உதவி காசோலை அட்டைகளில் டிஏபி சின்னம் பயன்படுத்தப்பட்டது குறித்து பரவலாக ஆட்சேபங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அரசாங்க மானியங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் கூடாது என்று பிரதமர் நினைவுறுத்தியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS