வாகனமோட்டும் பயிற்சி தேர்வில், தேர்ச்சி அடைய செய்வதற்காக பயிற்சியாளரிடம் 650 வெள்ளி லஞ்சம் பெற்றதாக வாகமோட்டும் பயிற்சி பள்ளியின் பயிற்றுநர் ஒருவர் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலையில் குற்றஞ்சாட்டப்பட்டார். 50 வயதான கே. ராமதேவன் என்ற அந்த பயிற்றுநர் , நீதிபதி மியோர் சுலைமான் அஹ்மாட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. ராமதேவன, கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி சிரம்பானில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை அல்லது 10 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
எனினும் தனக்கு எதிராக குற்றச்சாட்டை மறுத்து ராமதேவன் விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 8 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.