ஆவணங்களை கசிய விட்டாரா? இம்ரான்கானின் 3 ஆண்டு சிறைக்கு காரணமான தோஷகானா வழக்கு.. மீண்டும் விசாரணை

இஸ்லாமாபாத்: தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் இருக்கும் நிலையில், இந்த தண்டனையை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.

தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் பிரதமராக பதவி வகித்து வந்தபோது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதனையடுத்து அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் முக்கியமானதுதான் தோஷகானா வழக்கு. அதாவது, இவர் பிரதமாக இருந்த காலத்தில் இவருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் அரசின் தோஷகானா எனும் கஜானாவில் சேர்க்கப்பட வேண்டும்.

ஆனால், இம்ரான் கான் இதனை கஜனாவில் சேர்க்காமல் சட்டவிரோதமாக விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தை தனது சொந்த நோக்கங்களுக்காக செலவு செய்திருக்கிறார். கோடிக்கணக்கில் இப்படியாக பணம் ஊழல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே இதை எதிர்த்து அந்நாட்டின் தேர்தல் ஆணையம் இம்ரான் கானுக்கு எதிராக புகார் அளித்ததிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது இம்ரான் கான் சிறையில் இருக்கிறார்.

இந்த சிறை தண்டனை காரணமாக அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார். மேல் முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை கடந்த 25ம் தேதி நடைபெற இருந்த நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அன்ற விசாரணை நடத்தப்படவில்லை. எனவே இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.

ஒருவேளை இந்த நீதிமன்றத்திலும் தீர்ப்பு தனக்கு சாதகமாக வரவில்லையெனில் இம்ரான் கான் அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தை நாட யோசித்திருக்கிறார். முன்னதாக இவர் கைது செய்யப்பட்டபோது அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS