இரும்புக்கடை வளாகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சாக்குமூட்டையில் கட்டப்பட்டு,அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவருக்கு மரணம் விளைவித்ததாக மேலும் ஒரு நபர், இன்று பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஒரு லோரி ஓட்டுநரான 43 வயதுடைய எஸ். துரைராஜ் என்ற அந்த நபர் நீதிபதி ஃபைஸ் டிஜியாவுதீன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. இத்துடன் இந்த கொலை வழக்கு தொடர்பில் இதுவரையில் ஒரு இரும்புக்கடை முதலாளி உட்பட நால்வர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கான், தாமான் புக்கிட் செர்டாங்கில் உள்ள ஒரு இரும்புக்கடை வளாகத்தில் ஓர் இந்தியப் பிரஜையான 41 வயது ஏ. விநாயகமூர்த்தி என்பவருக்கு மரணம் விளைவித்ததாக துரைரஜ் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இரும்புக்கடை முதலாளியின் வர்த்தகத் தளத்தில் ஒரு குமாஸ்தாவாக வேலை செய்த வந்த தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னை நகரைச் சேர்ந்த விநாயகமூர்த்தி, பண களவாடல் தொடர்பில் இக்கொலை நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவில் சட்டம் 34 ஆவது பிரிவின் கீழ் துரைராஜ் என்ற தம்பி சாய் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இக்கொலை தொடர்பில் ஏற்கவே இரும்புக்கடை முதலாளியான டத்தோ அந்தஸ்தை கொண்ட 51 வயது டத்தோ வி. நந்தகுமார், அவரின் இரு மகன்களான 24 வயது மிரேன் ராம் மற்றும் 22 வயத கீர்த்திக் ராம் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் துரைராஜ், குற்றத்தை மறுத்து விசாரணை கோரியதால் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிபதி ஃபைஸ் டிஜியாவுதீன் அனுமதி அளித்தார்.