பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வீட்டை வெடிமருந்து வைத்து தகர்த்தப் போவதாக மிரட்டல் விடுத்த ஆடவரை போலீாசார் கைது செய்தனர். கெடா, பெடோங் கைச் சேர்ந்த அந்த 41 வயது சந்தேகப் பேர்வழி நேற்று கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஷுஹைலி ஜைன் தெரிவித்துள்ளார். அந்த நபர், சமூக வலைத்தளத்தின் வாயிலாக இந்த மிரட்டலை விடுத்து இருப்பது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர் சேமநிதி வாரியமான இ.பி.எவ் கொள்கை தொடர்பில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் என்ற முறையில் அன்வார் மேற்கொண்ட நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டதாக கூறப்படும் சம்பந்தப்பட்ட நபர், கடந்த சனிக்கிழமை இந்த மிரட்டலை விடுத்து இருப்பது தெரியவந்துள்ளது என்று ஷுஹைலி ஜைன் குறிப்பிட்டுள்ளார்.