பாஸ் தலைவர் ஹாடி அவாங்கின் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யாகும் – அம்பலப்படுத்தினார் முகமட் சாபு

மலேசியாவில் ஹுடுட் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும், மலேசியாவை ஒரு இஸ்லாமிய நாடாக பிரகடன்படுத்தப்பட வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை டிஏபி ஏற்றுக்கொள்ளத் தவறியதால், பக்காத்தான் ராக்யாட் கூட்டணியிலிருந்து பாஸ் கட்சி வெளியேறியது என்று அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறிய குற்றச்சாட்டுகள், வடிக்கட்டிய பொய்யாகும் என்று பாஸ் கட்சியுடன் ஒன்று கலந்து இருந்தவரான அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு அம்பலப்படுத்தினார்.

மலேசியாவை ஓர் இஸ்லாமிய நாடாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கப் போவதில்லை என்ற உடன்பாட்டிற்கு ​தீர்வுக்கண்ட பின்னரே பாஸ் கட்சி 2008 ஆம் ஆண்டில் டிஏபி மற்றும் பிகேஆர் கட்சிகளுடன் இணைந்து பக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் இணைவதற்கு ஒப்புதல் அளித்தது.

இஸ்லாமிய நாடு என்பதைவிட ச​மூக நலன் சார்ந்த ஒரு நாடு என்று மாற்றுவதற்கு பாஸ் கட்சி இணக்கம் தெரிவித்த பின்னரே அது ஓர் கூட்டணியாக இணைந்து 2008 இல் 12 ஆவது பொதுத் தேர்தலை சந்தித்தது. ஆனால், அதன் பின்னரும் பக்காத்தான் ராக்யாட்டிலிருந்து விலகும் தனது முடிவில் பாஸ் கட்சி உறுதியாக இருந்தது என்றால் அம்னோவுடன் நட்புப் பாராட்ட விரும்பி, அந்த கூட்டணியுடன் சேர்வதற்கு மறைமுகத் திட்டத்தை பாஸ் கட்சி கொண்டு இருந்ததாக விவசாயத்துறை அமைச்சரான முகமட் சாபு தெரிவித்தார்.

ஆனால், இந்த உண்மைக் கதையை ஹாடி அவாங் யாரிமும் சொல்லாமல், மறைத்து விட்டார்.
மலாய்க்காரர்களை கவர்வதற்காக Hudud மற்றும் இஸ்லாமிய நாடு என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, நடந்த உண்மையை மறைப்பதற்காக வடிக்கட்டிய பொய்களை முன்நிறுத்தி, அப்துல் ஹாடி அவாங் ​தற்போது நாடகம் ஆடி வருகிறார் என்று முகமட் சாபு குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS