நாட்டின் 58 ஆவது மலேசியத் தினம் வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் வேளையில் கோலாலம்பூர் மையப்பகுதியில் சில தரப்பினர் ஆட்சேபப் பேரணி என்ற போர்வையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து போலீசார் பல கோணங்களில் புலன் விசாரணயை முடுக்கியுள்ளனர்.
இந்த ஆட்சேப பேரணியை டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிகக்த்தான் நேஷனல் இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் சனிக்கிழமை மக்கள் பெரியளவில் கோலாலம்பூர், சோகோ பேரங்காடி முன்புறம் திரள வேண்டும் என்று திக் தோக் காணொளியில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவது தொடர்பில் போலீசார் 5 புகார்களை பெற்று இருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லவுடின் அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.
புலன் விசாரணைக்கு உதவும் வகையில் இதுவரையில் இருவரிடம் போலீசார், வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். மேலும் நால்வரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியிருப்பதாக டத்தோ அல்லவுடின் அப்துல் மஜிட் விளக்கினார்.
துணைப்பரிதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, சம்பந்தப்பட்ட 47 ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதை ஆட்சேபித்து இந்த ஆட்சேபப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.