கூலிம் மாவட்ட ஆலயங்களின் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்

கெடா, கூலிம் மாவட்டத்தில் அமைந்துள்ள 70 விழுக்காடு ஆலயங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட ஆலயப் பதிவுகளை கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அந்த ஆலயங்களில் எழுந்துள்ள தலைமைத்துவ சர்ச்சைக்கு ஒரு முடிவு கட்ட, சங்கங்களின் பதிவு அலுவலகமான ஆர்.ஓ.எஸ் ஸிக்கு பொறுப்யேற்றுள்ள அமைச்சர் என்ற முறையில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடன் நசுத்தியோன் இஸ்மாயில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆகக்கடைசியாக பாடாங் செராய் தொகுதியில் அமைந்துள்ள பாகன் சேனா சேரி மகா மாரியம்மன் ஆலயத்தில் வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி திருவிழா நடைபெறுவதற்கு கொடியேற்று விழா, சிறப்பு பூஜைகள் உட்பட இதர ஏற்பாடுகள் முழு வீச்சில் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் ஆலயத்தில் எழுந்துள்ள இரண்டு நிர்வாகங்களின் உட்பபூசல் பிரச்னையினால் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் முதன்மை நுழைவாசலை தோட்ட நிர்வாகம் இழுத்து மூடியிருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

தோட்ட நிர்வாகம் வாய்மொழியாக வழங்கிய அனுமதியின் பேரில்தான் திருவிழாவை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, போலீஸ் பெரிமிட்டும் பெறப்பட்ட நிலையில் திருவிழாவை நடத்துவதில் தோட்ட நிர்வாகம் தடை விதித்து இருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்று கோயிலின் இரண்டு நிர்வாகங்களில் ஒரு தரப்பான என். நாதன் விவரித்தார்.

ஆலய நிர்வாகத்தில் நாதன் மற்றும் சிவராமன் என இரு தலைமைத்துவ உட்பூசல் சர்ச்சை ஒரு புறம் இருந்தாலும் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறவிடாமல் ஆலயத்தை தோட்ட நிர்வாகம் இழுத்து மூடியது தவறாகும் எனற மலேசிய இந்து சங்கத்தின் கெடா மாநில பேரவைத் தலைவர் பரமசிவன் கூறுகிறார்.

இரவில் ஆலயத்தின் முன் டிய மக்களை நேரில் சந்தித்த பரமசிவன், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று ஆலயப் பக்தர்களுக்கு ஆலோசனை கூறினார்.

இதனிடைய இந்த ஆலயத் திருவிழா சர்ச்சை தொடர்பில் ஆலய நிர்வாகத்தில் சம்பந்தப்பட்டுள்ள இரு தரப்பினர் மற்றும் தோட்ட நிர்வாகத்தினர் இணைந்து இன்று பிற்பகலில் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்ட கோயிலின் பிரதான நுழைவாயிலை திறந்து விடுவதற்கு தோட்ட நிர்வாகம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது.

திருவிழா அன்று பூஜைகள் நடைபெறலாம். ஆனால், திருவிழா நடத்துவதற்கான இதர உற்சவ நிகழ்வுகள் இடம் பெறக்கூடாது என்று தோட்ட நிர்வாகம் தடை விதித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS