திருமணத்தை ஒத்திவைக்க பொய்யான போலீஸ் புகார்

தமது திருமணத்தை ஒத்திவைப்பதற்கு திட்டமிட்ட உணவு விநியோகிப்பாளர் ஒருவர், தனது திருமண செலவுக்கு வைத்திருந்த 9 ஆயிரம் வெள்ளி ரொக்கப் பணத்தை நான்கு நபர்கள் வழிமறித்து, கொள்ளையடித்து சென்று விட்டனர் என்று பொய் போலீஸ் புகார் செய்து இருப்பதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிபாய் தாராவே தெரிவித்தார்.

22 வயதுடைய அந்த நபர் செய்த போலீஸ் புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்ததைத் தொடர்ந்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததாக ஏசிபி அரிபாய் தாராவே குறிப்பிட்டார்.

சிரம்பான், ரந்தாவ் வில் நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்ததாக அந்த நபர் போலீசில் புகார் செய்த போதிலும் போலீசார் நடத்திய விசாரணையில் அப்படியொரு சம்பவம் நிகழவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரிபாய் தாராவே தெரிவித்தார்.

திருமணம் நடத்துவதற்கு போதுமான பணம் தம்மிடம் இல்லை என்பதால் பெண் வீட்டாரை சமாளிக்கவே இப்படியொரு நாடகம் ஆடியதாக அந்த இளைஞர் விசாரணையில் ஒப்புக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார். அதேவேளையில் அந்த நபர், இதற்கு முன்பு எந்தவொரு குற்றப்பதிவையும் கொண்டிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக அரிபாய் தாராவே தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS