சாலைவிதிமுறைகளை மீறும் குற்றவாளிகளை தலையில் வைத்து கொண்டாட வேண்டாம் என்று மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனமோட்டும் லைசென்ஸின்றி, சாலை வரி சிட்டையின்றி, சாலை விதிமுறைகளை மீறி வாகனத்தை செலுத்தும் வாகனமோட்டிகள் அதற்கான தண்டனைக்கு ஆளாக வேண்டும் என்ற மனோநிலையை மலேசியர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று சாலைபோக்குவரத்து இலாகா அறிவுறுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு நெகிரி செம்பிலான், நீலாயில், சாலைவரி சிட்டையின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய பூட் பான்டா உணவு விநியோகிப்பாளரின் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி, அவரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த சாலை போக்குவரத்து இலாகா அமலாக்க அதிகாரிகள், பொது மக்களால் தூற்றுப்பட்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் தனது பூட் பான்டா பெட்டியை முதுகில் சுமந்து கொண்டு சாலையோரமாக நடந்து செல்லும் அந்த உணவு விநியோகிப்பாளரின் நிலையைக் கண்டு , பரிதாபப்பட்டு, அவரை ஒரு நாயகரைப் போல் சமூக வலைத்தளங்களில் போற்றப்பட்டு வரும் பொது மக்களின் மனோநிலையையும் அவ்விலாகா கேள்வி எழுப்பியுள்ளது.
சம்பந்தபட்ட உணவு விநியோகிப்பாளர், தொடர்ந்து மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டால் அவருக்கும் பாதுகாப்பு இல்லை. அவரின் மோட்டார் சைக்கிளினால் மோதப்படக்கூடிய நபர்களுக்கும் குறிப்பாக பாதசாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இந்நிலையில் அந்த மோட்டார் சைக்கிளோட்டிக்கு சாலை வரி சிட்டையில்லை என்பது நன்கு தெரிந்திருந்தும், அவர் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து பயன்படுத்துவதை அனுமதிக்க முடியுமா என்று சாலை போக்குவரத்து இலாகா கேள்வி எழுப்பியுள்ளது.