தங்களை காப்புறுதி நிறுவன உயர் அதிகாரி மற்றும் போலீஸ் விசாரணை அதிகாரி என்று கூறிக்கொண்டு இரு நபர்களின் தொலைபேசி ஸ்கேம் மோசடி உரையாடலில் சிக்கிய 70 வயது மூதாட்டி ஒருவர் தமது வாழ்நாள் சேமிப்பான 38 லட்சத்து 39 ஆயிரம் வெள்ளியை இழந்துள்ளார்.
தம்மடைய சேமிப்பில் எஞ்சியிருப்பது 79 வெள்ளி 50 காசு என்று தெரியவந்த போதுதான், ஸ்கேம் மோசடியில் தாம் பணத்தை இழந்திருப்பதை உணர்ந்து, அந்த மூதாட்டி போலீசில் புகார் செய்து இருப்பதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்தார்.
சுபாங்ஜெயாவை சேர்ந்தவரான பணி ஓய்வுப்பெற்ற முன்னாள் தனியார் நிறுவன பணியாளரான அந்த மூதாட்டி ,இச்சம்பவம் தொடர்பில் போலீசில் புகார் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தமக்கு முன்பின் தெரியாத தொலைபேசி எண்ணில் அழைப்பை பெற்ற அந்த மூதாட்டி, தமது பெயரை பயன்படுத்தி காப்புறுதிப் பணக் கோரிக்கை வந்து இருப்பதாக தன்னை காப்புறுதி அதிகாரி என்று கூறிக்கொண்டு, நபர் ஒருவர் பேசியிருக்கிறார்.
காப்புறுதி பணம் தொடர்பாக தாம் எந்தவொரு விண்ணப்பமும் செய்யவில்லை என்று அந்த மூதாட்டி மறுத்த போது சிறிது நேரத்தில் மற்றொரு அழைப்பை பெற்ற அந்த மூதாட்டி, சட்டவிரோதப் பண நடவடிக்கையில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், தாம் கைது செய்யப்படவிருப்பதாகவும் தன்னை போலீஸ் அதிகாரி கூறிக்கொண்டு ஒரு நபர் பேசியுள்ளார்.
இவர்களுக்கு இடையிலான உரையாடல் நடந்த கொண்டிருந்த போது அந்த மூதாட்டியின் சேமிப்புப்பணம் மிக சாமார்த்தியமாக வங்கி கணக்கிலிருந்து கபளிகரம் புரியப்பட்டுள்ளது என்று டத்தோ ஹுசெயின் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.