கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி 1சுங்கை பூலோ அருகில் கத்ரி நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய பீச்க்ராஃப்ட் 1 இலகு ரக விமானம், சுபாங், சுல்தான் அப்துல் அசிஸ் ஷா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக பிற்பகல் 2.47 மணி வரையில் விமான நிலைய கட்டுப்பாட்டுக் கோபுரத்துடன் தொடர்பில் இருந்ததாக இன்று வெளியிடப்பட்ட அந்த விமான விபத்து தொடர்பான பூர்வாங்க விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அந்த இலகு ரக விமானம், சரியாக பிற்பகல் 2.48 மணிக்கு விமான நிலையத்தின் 15 ஆவது ஓடுபாதையில் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால், அதன் பின்னர் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.
விமான நிலைய கட்டுப்பாட்டுக் கோபுரத்தின் ராடார் திரையில் ஆகக்கடைசியாக பதிவான நிலவரத்தின்படி விமானம், 2,600 அடி உயரத்தில் பறந்துள்ளது. விமானத்தின் வேகம் குறைக்கப்பட்டு, தரை இறங்குவதற்கு ஏதுவாக சக்கரங்கள் இறக்கப்பட்டு , பிற்பகல் 2.49 மணிக்கு 1,025 அடி உயரத்திலிருந்து 550 அடிக்கு இறங்கிய பின்னர் விமானத்தின் தொடர்பு முழுமையாக செயலிழந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்மினாவில் நிகழ்ந்த இரண்டாவது விமான விபத்தான இந்த பீச்க்ராஃப் 1 இலகு ரக விமானம் விபத்தில் தரையில் வாகனத்தில் பயணம் செய்த இருவரும், விமானத்தில் பயணம் செய்த எட்டு பேரும் உயிரிழந்தனர். இதில் பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கொல்லப்பட்டார்.