எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஆளுங்கட்சி எம்.பி.க்களைப் போல சமச்சீரான மானியத்தை ஒதுக்கீடு செய்யாத விவகாரம், இன்று பிற்பகலில் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதத்திற்கு வித்திட்டது. இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரையொருவர் கடுமையாக சாடிக்கொண்டதால் மக்களவையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.
ஒற்றுமை அரசாங்கம், மாமன்னரால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் அனைத்து எம்.பி.க்களுக்கும் பாரபட்சமின்றி மானியம் ஒதுக்கப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனலின் ஆராவ் எம்.பி.ஷஹிடா கசிம் முன்வைத்த வாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஷஹிடான் கசிமின் பரிந்துரைக்கு ஆளும் கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய் சண்டை நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பை உண்டு பண்ணியது.